மந்திர ஆசைகள்

2/25/2010

பதின்மம்

என்னையும் தொடர்  பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் மீன்துள்ளியானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ?  என் பதின்ம வயது அனுபவத்தை  தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால்  தொடர்கிறேன் .

சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை  நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு  பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும்  குணசித்திர வேஷம் எனக்கு .

பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .

டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .

எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும்   என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது .  மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .

பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .

ஏதாவது  கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை  பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென்  கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .

என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .

இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று  புலம்பிவிட்டு  நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் .

திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு   விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .

போடா , போ , எந்த படத்துல  இந்த காமெடி , சொல்லவே வில்லை என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .

தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம்    தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .

பள்ளி கூடத்து  நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .


கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக  மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் .

பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .

நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும்  ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் . 

சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட    நான் மட்டும் தனி மரமானேன் .  வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .


அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை  .

நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை    மூடிய நிலையில் நான் .

"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "

கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை .

இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு  அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .

என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் .
புவன் (சுட்டப்பழம் )
குந்தவை
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .


5 பதில் செப்பியவர்கள்:

கோவி.கண்ணன் சொன்னது…

அனுபவங்களை சுவையாக எழுதி இருக்கிறீர்கள். கலெக்டரிடம் பரிசு பெற்றது பெரும் சாதனை. சாதனைகள் தொடருவதற்கு நல்வாழ்த்துகள்

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல சுவாரஸ்யமா இருக்கு

மீன்துள்ளியான் சொன்னது…

டேய் நல்லா வந்து இருக்குடா . நன்றிடா அழைப்பு ஏற்று எழுதியதற்கு

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல நினைவுகள்...சுவாரஸ்யம்

kunthavai சொன்னது…

//கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம் தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது

எனக்கு இவ்வளவு நல்ல தம்பியா....
வெற்றியும் தோல்வியும் நிறைந்தது தானே வாழ்க்கை. அது இல்லன்னா வாழ்க்கை ரசிக்காது.